மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன.
இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
இதன் மொத்தப்பரப்பு 65000 சதுர மீட்டர் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோவில் கி.பி. 1623-1655 ஆண்டுகளில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றது.
இறைவன் சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரராக அவதாரம் செய்து, கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கைத் துணையாக ஏற்று மகிழ்ந்தார்.
இவர்களுக்கென்று இரு கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவிலைச் சுற்றி மிகப்பெரிய நான்கு வாயில்கள் உள்ளன. இங்கே வருகை தரும் அன்பர்கள் கட்டுமானங்களில் காணப்படும் வண்ணமயமான சிற்பங்களைக் கண்டு வியக்கின்றனர்.
இக்கோவிலில் அதிசயக்கத்தக்க பிரம்மாண்டமான ஒரு காட்சி ஆயிரங்கால் மண்டபம். இம்மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கலைநயமிக்க சிற்பங்களுடன் உறுதி வாய்ந்ததாக அமைந்துள்ளது.
திருஅண்ணாமலையார் கோயில் தல வரலாறு
எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் தூண்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும். அதன் நடைவழியில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. அதன் நுழைவாயில் அருகில் ஒப்பற்ற இசைத்தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் தட்டினால் வெவ்வேறு ஒலி எழுப்பும் நுணுக்கங்களைக் கொண்ட கலை படைப்பாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.
இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.
அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் ‘சிவன் முக்திபுரம்’ என்றும் அழைக்கின்றனர்.
இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது.
விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

1. மூலவர்
இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர்.
இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.
2. அம்பாள் சன்னிதி
இத்தளத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல் லால் ஆனது.
அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார்.
மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.
பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.
இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.
மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் ‘தடாதகைப் பிராட்டி’ என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார்.
அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.
மீனாட்சி அம்மன் (மூலவர் இறைவி), சுந்தரேசுவரர் (மூலவர் இறைவன்), முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேசுவரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர்,மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள் ஆகும்.
கோயிலின் அமைப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது.
இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.
இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டினாலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.
சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
கலையழகு மிக்க மண்டபங்கள்
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.
- அஷ்ட சக்தி மண்டபம்,
- மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
- முதலி மண்டபம்,
- ஊஞ்சல் மண்டபம்,
- கம்பத்தடி மண்டபம்,
- கிளிக்கூட்டு மண்டபம்,
- மங்கையர்க்கரசி மண்டபம்,
- சேர்வைக்காரர் மண்டபம்,
- திருக்கல்யாண மண்டபம்,
- ஆயிரங்கால் மண்டபம்
- வீரவசந்தராயர் மண்டபம்
- அஷ்ட சக்தி மண்டபம்
1. அஷ்ட சக்தி மண்டபம்
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
2. கம்பத்தடி மண்டபம்
கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்.
கம்பத்தடி மண்டபம், நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி செய்யப்பட்டது (1877). சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.
அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது.
கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
3. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருட்டிண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.
மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, கி.பி.1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது.
மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது.
ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.
இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.
4. வீரவசந்தராயர் மண்டபம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.
400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.
2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது. தற்போது இம்மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறப்புகள்
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று.
இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.
குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர், சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராசகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.
இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
செல்வது எப்படி?
1. வான் வழி
மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.
இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
2. தொடர்வண்டி வழி
மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
3. சாலை வழி
தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.